கல்லூரி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது
- மகளை காணவில்லை என்று மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
- மாணவி வாலிபர் ஒருவருடன் கரூரில் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.
திருப்பூர் :
திருப்பூரில் உள்ள கல்லூரியில் 17 வயது மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி மகளைக் காணவில்லை என்று மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அந்த மாணவி வாலிபர் ஒருவருடன் கரூரில் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியை பத்திரமாக மீட்டனர். அவருடன் இருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் மாணவி வீட்டின் அருகில் வசிக்கும் ஒர்க் ஷாப் தொழிலாளியான கோபாலகிருஷ்ணன் (வயது 23) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் கல்லூரி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து திருப்பூர் கொங்குநகர் அனைத்து மகளிர் போலீசார் கோபாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.