காய்ச்சலை தடுக்க பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் - தாராபுரம் நகராட்சி தலைவர் வேண்டுகோள்
- தமிழகத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது
- அடிக்கடி கபசுர குடிநீர் காய்ச்சி குடிக்க வேண்டும்
தாராபுரம்
தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் பெரும்பாலும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும், அதே போல தாங்கள் குடியிருக்கும் இடத்தை சுற்றி குப்பை கூழங்கள் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள பழைய டயர்கள் மற்றும் காலி பாட்டில்கள், தேங்காய் தொட்டிகள் ஆகியவற்றை சேர்த்து வைக்காமல் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் மற்றும் சாக்கடை தண்ணீர் தேங்காமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.
இதனால் வீட்டில் கொசு தொல்லையை ஒழிக்க முடியும், பாதுகாப்பான முறைகளை கடைபிடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றுக்களை பாதிக்காமல் ஒவ்வொருவரும் தங்களை காத்து கொள்ள வேண்டும்.
கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி கபசுர குடிநீர் காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவுகள் அதிகமாக இருக்குமேயானால் உடனடியாக தாராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கு உடனடியாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் இதனால் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.