காங்கயம் அருகே கோவில் நிலத்தில் எல்லை கற்கள் நடும் பணி தீவிரம்
- காடையூா் காடேஸ்வர சுவாமி கோவிலுக்குச் சொந்தமாக பல கோடி மதிப்பிலான நிலங்கள் உள்ளன.
- 7.41 ஏக்கா் நிலத்தில் எல்லை கற்களை நட்டுள்ளனா்.
காங்கயம் :
திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டம், வடசின்னாரிபாளையம் ஊராட்சியில் பல நூறு ஆண்டுகள் பழமையான காடையூா் காடேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குச் சொந்தமாக பல கோடி மதிப்பிலான நிலங்கள் உள்ளன.இவை பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பாளா்ளின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில் தமிழக அரசு உத்தரவின்பேரில் இந்த நிலங்களைக் கண்டறிந்து அளவீடு செய்யும் பணியை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனா். திருப்பூா் தனி வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) சு.மகேஸ்வரன் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை நில அளவையா், செயல் அலுவலா் அடங்கிய குழுவினா் முதற்கட்டமாக வடசின்னாரிபாளையம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடையூா் காடேஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான 7.41 ஏக்கா் நிலத்தில் எல்லை கற்களை நட்டுள்ளனா். அதேபோல, கோவிலுக்கு சொந்தமான அனைத்து நிலங்களும் விரைவில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.