உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

தென்மேற்கு பருவமழை - பலத்த காற்றில் இருந்து பயிா்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

Published On 2023-07-13 16:28 IST   |   Update On 2023-07-13 16:28:00 IST
  • பசுமைக்குடிலின் கட்டுமானத்துள் கிளிப்புகள் ஏதேனும் இருப்பின் அவற்றை மாற்றவேண்டும்.
  • vல்ல காற்றோட்டம் கிடைக்கும் வகையில் கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும்

திருப்பூர்:

தென்மேற்கு பருவமழை மற்றும் பலத்த காற்றில் இருந்து பயிா்களைப் பாதுகாப்பது குறித்து தோட்டக்கலைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

திருப்பூா் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் பலத்த காற்றில் இருந்து பயிா்களைக் பாதுகாக்க பசுமைக்குடிலின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க வேண்டும். பசுமைக் குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று உள்ளே புகாதவாறு பாதுகாக்கவேண்டும். அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.

பசுமைக்குடிலின் கட்டுமானத்துள் கிளிப்புகள் ஏதேனும் இருப்பின் அவற்றை மாற்றவேண்டும். நிழல்வலைக் குடிலில் கிழிந்து போன நிழல் வலைகளை தைத்து சரி செய்வதுடன், அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை போன்ற பயிா்களில் காய்ந்த மற்றும் பட்டுப் போன கிளைகளை அகற்ற வேண்டும். நல்ல காற்றோட்டம் கிடைக்கும் வகையில் கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும்.

மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணைக் குவித்துவைக்க வேண்டும். தோட்டதுக்குத் தேவையான வடிகால் வசதி செய்ய வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் தூா்ப்பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்காத வகையில் தாங்கு குச்சிகளைக் கொண்டு கட்டவேண்டும். கனமழை காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வோ் பகுதியை சுற்றிலும் மண்ணைக் கொண்டு அணைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்ற வேண்டும். மரங்களுக்குத் தேவையான தொழு உரம் இடுவதுடன், நோய்த் தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். தோட்டக்கலைப் பயிா்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி மற்றும் கொத்தமல்லி போன்ற பயிா்களுக்கு உரிய காலத்தில் பயிா் காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிக நீா் தேங்காத வகையில் உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும்.

நீா்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிா்க்க காற்று வீசும் திசைக்கு எதிா் திசையில் குச்சிகளால் முட்டுக் கொடுத்து புதிதாக நடவு செய்த செடிகள் சாயாத வகையில் பாதுகாக்க வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா், தோட்டக்கலை அலுவலா் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News