உள்ளூர் செய்திகள்

பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற காட்சி.

சோமனூர் விசைத்தறியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

Published On 2022-08-12 11:42 GMT   |   Update On 2022-08-12 11:42 GMT
  • 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது.
  • தமிழக அரசு முன்வந்து சாதா விசைத்தறி டேரிப்க்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும்

மங்கலம் :

கோவை ,திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சோமனூர் சங்க பொதுக்குழு கூட்டம் சாமளாபுரம் அருகே உள்ள கோம்பக்காட்டு புதூர் -தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. விசைத்தறி சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு சங்கத்தலைவர் சி.பழனிச்சாமி தலைமை தாங்கினார். சங்க செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் பி.கோபாலகிருஷ்ணன், துணைச்செயலாளர் ஈஸ்வரன், சங்க பொருளாளர் பூபதி மற்றும் கிளை நிர்வாகிகள் ,விசைத்தறி உரிமையாளர்கள் உள்பட பலர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சோமனூர் விசைத்தறி சங்க பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- அரசு அறிவித்துள்ள 30 சதவீதம் மின் கட்டண உயர்வு விசைத்தறியாளர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. ஒரு யூனிட்டிற்கு ரூ.1.40 பைசா உயர்வு என்பது ஒவ்வொரு விசைத்தறி யாளருக்கும், 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது. எனவே கூலிக்கு நெசவு செய்யும் எங்களால் எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத சூழ்நிலையில் உயர்த்திய மின் கட்டண உயர்வை அரசு சாதா விசைத்தறிகளுக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் .

வருகிற 16-8-2022ந்தேதி காலை 10 மணியளவில் கோவை தனியார் கல்லூரியில் நடைபெறும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்து கேட்பு கூட்டத்தில் ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் குடும்பத்தோடு கட்டாயம் கலந்து கொண்டு தங்களின் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனவும், அரசும் மின்வாரியமும் ,தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் சாதா விசைத்தறி டேரிப்-க்கு மின் கட்டணத்தை உயர்த்தினால் மின் கட்டண உயர்வை வேறு எந்த வகையிலும் செலுத்த இயலாது. ஆகவே விசைத்தறிகளை நிறுத்தி போராடுவதை தவிர வேறு வழியில்லை. ஆகவே தமிழக அரசு முன்வந்து சாதா விசைத்தறி டேரிப்க்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் எனவும், தமிழக அரசு இலவச வேட்டி,சேலை,சீருடை ரகங்களை விசைத்தறிகளுக்கு கொடுத்து உதவ வேண்டும் எனவும், மேலும் சாதா விசைத்தறிகளுக்கு மின் கட்டண உயர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவருக்கும் அனைத்து விசைத்தறி யாளர்களும் பதிவு அஞ்சல் அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News