உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சிகரெட் லைட்டர்களில் விலை விவரம் அச்சிடாமல் விற்பனை - 5 கடைக்காரர்கள் மீது நடவடிக்கை

Published On 2022-07-27 11:52 GMT   |   Update On 2022-07-27 11:52 GMT
  • திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் மலர்கொடி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுடன் ஆய்வு நடந்தது.
  • 22 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 5 இடங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

திருப்பூர் :

தொழிலாளர் ஆணையாளர் டாக்டர் அதுல் ஆனந்த் அறிவுரைப்படியும், சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவுறுத்தலின்படியும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்கள் பொட்டலப்பொருட்கள் விதிகளை மீறியது தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுடன் ஆய்வு நடந்தது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்களில் சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப்பொருட்கள்) விதிகளை மீறப்பட்டுள்ளதா என்று கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

22 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 5 இடங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட 5 விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டமுறை எடையளவு சட்டத்தின்படி, ஒரு பொருள் விற்பனை செய்யப்படும் போது பொட்டலத்தின் மேல் உறையில் இறக்குமதி செய்யப்பட்ட பொட்டலப்பொருளில், இறக்குமதியாளர், பொட்டலமிடுபவர் முழு முகவரி, பொருளின் பொது பெயர், தயாரிப்பாளர், பொருளின் நிகர எடை, தயாரிப்பு தேதி, வரியுடன் விற்பனை விலை ஆகியவை அச்சிடப்பட வேண்டும். இந்த விவரங்களை அச்சிடாமல் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News