நுகர்வோர் வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம்
- முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நுகர்வோர் வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்ற அமர்வு நடைபெற்றது.
- மொத்தம் 4 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
திருப்பூர் :
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும், முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்வர்ணம் நடராஜன் தலைமையில் திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நுகர்வோர் வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்ற அமர்வு நடைபெற்றது.
மாவட்ட நுகர்வோர் நீதிபதி தீபா, கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் ஆகியோர் அமர்வு நீதிபதிகளாக பங்கேற்றனர். கட்டுமானம் சம்பந்தமான ஒப்பந்த வழக்கு, மருத்துவ காப்பீடு கோருதல் சம்பந்தமான வழக்கு, வாகன கடன் சம்பந்தமான வழக்கு உள்பட மொத்தம் 4 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் வாகன கடன் தொடர்பான வழக்கில் மனுதாரர் தரப்பில் எதிர்மனுதாரருக்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்பட்டு நிலுவையில்லா சான்றிதழ் வழங்கி சமரச தீர்வு காணப்பட்டது. இதில் நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.