உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பல்லடத்தில் வடமாநில வாலிபர் கடத்தல்

Published On 2023-03-22 08:22 GMT   |   Update On 2023-03-22 08:22 GMT
  • தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறப்படுகிறது.
  • ரூ.40,000 பணம், வெள்ளி பிரேஸ்லெட், உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

பல்லடம் :

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பஜூலு மண்டல் என்பவரது மகன் ஷாஜி மண்டல் (வயது 35). இவர் தற்போது பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரான் காலனியில் வசித்துக் கொண்டு, தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வட மாநிலப் பெண் ஒருவர் வேலையில்லாமல் கஷ்டப்படுவதாகவும் வேலை இருந்தால் சொல்லுமாறும், தற்போது மிகவும் சிரமமாக இருப்பதால் பண உதவி செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் அவருக்கு உதவி செய்வதற்காக அந்தப் பெண் வரச் சொன்ன சின்னக்கரை பஸ் நிறுத்தம் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் ஷாஜி மண்டலை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரிடமிருந்த ரூ.40,000 பணம், வெள்ளி பிரேஸ்லெட், உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு அவரை திருப்பூர் அரசு மருத்துவமனை அருகே இறக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.

இதையடுத்து தன்னை கடத்தி பணம் பறித்த பெண் உள்ளிட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் அவரிடம் பேசிய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஜித் என்பவரது மனைவி சுக்லா சர்தார்(35)என்பவரை பிடித்து விசாரணை செய்த போது, அவரும் இன்னும் நான்கு நபர்களும் சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News