உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

விபத்துக்களை தடுக்க குறிச்சிக்கோட்டை- கொமரலிங்கம் சாலை விரிவுபடுத்தப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2023-06-04 04:19 GMT   |   Update On 2023-06-04 04:19 GMT
  • போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் இந்த சாலை மேம்படுத்தப்படாமல் உள்ளது.
  • குருவப்பநாயக்கனூர் கிராமம் தாண்டியதும் அமைந்துள்ள வளைவிலும் விபத்து அபாயம் உள்ளது.

உடுமலை:

உடுமலை குறிச்சிக்கோட்டையில் இருந்து கொமரலிங்கம் செல்லும் ரோடு நெடுஞ்சாலைத்துறையால் மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.கேரளா மூணாறு, மறையூர் உட்பட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் உடுமலை வராமல், குறிச்சிக்கோட்டை, கொமரலிங்கம், நெய்க்காரபட்டி வழியாக பழனிக்கு செல்ல இந்த வழித்தடம் பயன்படுகிறது.வழித்தடத்தில் 20க்கும் அதிகமான கிராமங்கள் அமைந்துள்ளன. போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் இந்த சாலை மேம்படுத்தப்படாமல் உள்ளது. பல இடங்களில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு விலகிச்செல்ல முடியாத அளவுக்கு சாலை குறுகலாக உள்ளது.இடைவழித்தடமாக உள்ள சாலையை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சாலையில் குறிச்சிக்கோட்டை தாண்டியதும் பி.ஏ.பி., கால்வாய் அருகே அபாய வளைவு உள்ளது. இங்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் எவ்வித எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை.குருவப்பநாயக்கனூர் கிராமம் தாண்டியதும் அமைந்துள்ள வளைவிலும் விபத்து அபாயம் உள்ளது.

இந்த வளைவுகள் மட்டுமல்லாது சாலையை ஒட்டி குடிநீர் திட்டம் மற்றும் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், விடுமுறை நாட்களில் இந்த வழித்தடத்தில் சுற்றுலா வாகனங்கள் அதிக அளவு வருகின்றன. தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருள் ஏற்றி வரும், கனரக வாகனங்கள் குறுகலான இந்த சாலையில் செல்லும் போது சுற்றுலா வாகனங்கள் விலகி செல்ல முடியாமல் விபத்துகள் ஏற்படுகின்றன. இப்பிரச்சினைக்கு தீர்வாக குறிச்சிக்கோட்டையில் இருந்து கொமரலிங்கம் வரை இந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும். சாலையை மேம்படுத்தினால் பழனிக்கு மாற்றுப்பாதையாகவும் இந்த சாலை அமையும் வாய்ப்புள்ளது என்றனர்.

உடுமலை அருகே மூன்று ரோடு சந்திப்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ரவுண்டானா அமைத்தல் உட்பட சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து முக்கோணம் பகுதியில் ஆனைமலை ரோடு பிரிகிறது. அப்பகுதியில் ஆனைமலை, தேவனூர்புதூர் உட்பட கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் இணைப்பு ரோட்டில் நிறுத்தப்படுகின்றன.அப்போது தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது.மேலும் சந்திப்பு பகுதியில் இரு புறங்களிலும் பஸ்கள் நிறுத்தும் போது தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இந்த சந்திப்பு அருகிலேயே மழை நீர் ஓடை மீது கட்டப்பட்ட பாலம் குறுகலாக இருப்பது சிக்கலை அதிகரிக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக சந்திப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தி பஸ்கள் நிற்க தனியாக இடம் ஒதுக்க வேண்டும்.இணைப்பு ரோடு பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால் சந்திப்பில் விபத்துகள் தொடர்கதையாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இத்திட்டம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பது உயிரிழப்புகளை தவிர்க்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News