பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் - கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை
- மாவட்ட தலைவர் நந்தகுமார், துணைத்தலைவர் சரவணமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.
- முடிவில் மாவட்ட துணைத்தலைவர் கணேசன் நன்றி கூறினார்.
திருப்பூர்:
தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலா்கள் சங்க 3-வது மாவட்ட மாநாடு திருப்பூர் டவுண் ஹால் அருகேயுள்ள ஒரு கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நந்தகுமார், துணைத்தலைவர் சரவணமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கல்வித்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வரும் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளா்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இளநிலை உதவியாளர்களின் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள நேரடி நியமன உதவியாளர் முறையினை ரத்து செய்ய வேண்டும். கருணை அடிப்படையில் பணிக்காக காத்திருப்போருக்கு உடனடியாக பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சுப் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பொதுமாறுதல் மூலம் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. முடிவில் மாவட்ட துணைத்தலைவர் கணேசன் நன்றி கூறினார்.