உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்ட 2 சிறுவர்களுக்கு வைப்புத்தொகை ஆணை

Published On 2023-02-03 07:54 GMT   |   Update On 2023-02-03 07:54 GMT
  • 18 வயது நிறைவடைந்தபின் குழந்தையின் நலத்திற்கு அந்த தொகை முழுவதும் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
  • 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தக்கூடாது.

 திருப்பூர்:

குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டத்தின்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித தொழிலிலும் அமர்த்துவது குற்றமாகும். 14 வயது முதல் 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்ந்தும் நிறுவனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம், 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அதன்படி திருப்பூர் மாவட்ட குழந்தை தொழிலாளர் தொடர்பான ஆய்வுகளில் 2 குழந்தை தொழிலாளர்களின் வழக்குகள் முடிக்கப்பட்டன. இந்த வழக்குகளில் ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என விதிக்கப்பட்ட அபராத தொகை குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் மறுவாழ்வு கணக்கில் செலுத்தப்பட்டது.

குழந்தை தொழிலாளியாக மீட்கப்பட்ட சிறுவர்களின் நலனுக்காக அரசின் பங்குத்தொகையாக ரூ.15 ஆயிரம், பெற்று குழந்தைகள் மறுவாழ்வு கணக்கில் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரையில் 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டித்தொகை கிடைக்கும் வகையில் நிரந்தர வைப்பு வைக்கப்பட்டு, குழந்தையின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 18 வயது நிறைவடைந்தபின் குழந்–தையின் நலத்திற்கு அந்த தொகை முழுவதும் வங்கிக்கணக்–கில் செலுத்தப்படும்.

அவ்வாறு 18 வயது பூர்த்தியடையாத சிறுவன் மீட்கப்பட்டு அந்த சிறுவனுக்கு ரூ.35 ஆயிரம் நிரந்தர வைப்பு வைக்கப்பட்டு அதற்கான ஆணையை கலெக்டர் வினீத் சிறுவனிடம் வழங்கினார். இதுபோல் மீட்கப்பட்ட மற்றொரு 18 வயது பூர்த்தியடைந்த சிறுவனுக்கு ரூ.47 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தும் ஆணையை கலெக்டர் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தக்கூடாது.

இந்த தகவலை திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News