மழையால் பூர்த்தியான கால்நடை தீவனம்
- வருவாய்த்துறையால் வகைப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
- கால்நடைகளுக்கான தீவன தேவை ஓரளவு பூர்த்தியாகிறது.
அவிநாசி:
அவிநாசி, சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக மாலை மற்றும் இரவில் மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பலத்த மழை கூட பெய்தது. இதனால் ஆங்காங்கே உள்ள சிறிய நீர்நிலைகளில் தண்ணீர் வழிந்தோட துவங்கியிருக்கிறது.இந்நிலையில், கிராமப்புறங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தரிசு நிலங்கள், மேய்ச்சல் நிலம் என வருவாய்த்துறையால் வகைப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
ஏப், மே மாதங்களில் சுட்டெரித்த வெயிலால், தீவனத்தேவையை பூர்த்தி செய்ய கால்நடை வளர்ப்போர் திணற வேண்டியிருந்தது. தற்போது பெய்துள்ள மழையால் செடி, கொடிகள் தழைத்து வளர துவங்கியுள்ளன.நடுவச்சேரி பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த சிலர் கூறுகையில், 'மழையால் செடி, கொடிகள் தழைத்து வளர்ந்துள்ளன.இதனால், கால்நடைகளுக்கான தீவன தேவை ஓரளவு பூர்த்தியாகிறது என்றனர்.