அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை
- பலர் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ளனர்.
- தொழிலாளர்கள் பதிவு செய்யாமல் நலத்திட்ட பயனாளிகளாக தேர்வாகாமல் உள்ளனர்.
உடுமலை:
மத்திய, மாநில அரசின் திட்டங்கள் சென்றடையச்செய்யும் வகையில் 26 வகை அமைப்புசாரா தொழிலாளர்கள் வரையறுக்கப்பட்டுள்ளனர். சிறு குறு விவசாயிகள், விவசாய கூலிகள், கட்டுமான தொழிலாளர்கள், நெசவாளர்கள், செய்தித்தாள்கள் வினியோகிப்போர் உள்ளிட்ட பலர் இதில் அடங்குவர்.
தேசிய அமைப்புசாரா தொழிலாளர் திட்டங்களில் சேர பதிவு முகாம்கள், பொது சேவை மையங்கள் வாயிலாக பலர் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ளனர்.இருப்பினும்சில தொழிலாளர்கள் பதிவு செய்யாமல் நலத்திட்ட பயனாளிகளாக தேர்வாகாமல் உள்ளனர்.பதிவு செய்யாத தொழிலாளர்கள், தங்களது முழுவிபரங்களை அருகில் உள்ள பொது சேவை மையங்களில் அளித்து தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நல அடையாள அட்டை பெறலாம்.
அதன் ஒரு பகுதியாக உடுமலை ஒன்றியம் ஆண்டியக்கவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்காடு பகுதியில் தேசிய ஊரக வேலை திட்ட பயனாளிகளுக்கு நலவாரிய அட்டை வழங்கும் முகாம் நடந்தது.ஊராட்சித்தலைவர் மோகனவல்லி, துணைத்தலைவர் விஜயகுமார், ஊராட்சி செயலர் ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். அரசாணைக்கு பின், பிற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.