தொடரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
- பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது.
- வட்டமலைக்கரை ஓடையில் 1.37 அடிக்கு தண்ணீர் உள்ளது.
அவினாசி:
மேற்கு திசை காற்றின் வேகம் ,மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்துவருகிறது. தென்மேற்குப் பருவமழையால், அமராவதி, திருமூர்த்தி அணைகளுக்கு நீர் வரத்து உள்ளது. அமராவதி அணை மொத்தம் 90 அடியில், 88.46 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,772 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 1,810 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது.திருமூர்த்தி அணை மொத்தம் 60 அடியில் 28.77 அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு 31 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது.அணையிலிருந்து 27 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. உப்பாறு அணை 4.64 அடி,நல்லதங்காள் அணை 13.29, வட்டமலைக்கரை ஓடையில் 1.37 அடிக்கு தண்ணீர் உள்ளது.தொடரும் மழையாலும் பாசனத்துக்கு கைகொடுக்கும் அணைகளில் நீர் இருப்பு சிறப்பாக உள்ளதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.