குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் ஆலோசனை
- தமிழ்நாடு முதலமைச்சரே நேரில் சென்று இது போன்ற திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார்.
- வறுமையை ஒழித்துத்தரமான வாழ்விற்கு தேவையான அடிப்படைகளை நிர்ணயம் செய்யும் என்றார்.
குடிமங்கலம்
தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்த நிலையில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் இரண்டு, மூன்று மாவட்டங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரே நேரில் சென்று இது போன்ற திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார். இந்த அரசின் தொடர் முயற்சிகள், வறுமையை ஒழித்துத்தரமான வாழ்விற்கு தேவையான அடிப்படைகளை நிர்ணயம் செய்யும் என்றார்.
தொடர்ந்து 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.20,000 மதிப்பீட்டில் தொழில் கடனுதவிக்கான காசோலையையும், 8 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.70.20 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிக்கான காசோலையையும் என மொத்தம் ரூ.70.40 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மதுமிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சுகந்தி முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாதிக் பாட்ஷா, சிவகுருநாதன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.