இன்ஸ்பயர் விருது - பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
- உரிய மாணவரின் வங்கி கணக்கு எண்ணிற்கு, 10 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு செலுத்துகிறது.
- பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 10-ம்வகுப்பு வரையிலான மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
தாராபுரம்:
தேசிய அறிவியல் தொழில்நுட்ப துறையின் சார்பில், பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவித்து அங்கீகாரம் வழங்க 2008 முதல் இன்ஸ்பயர் மானாக் விருது வழங்கப்படுகிறது.அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 10-ம்வகுப்பு வரையிலான மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வளித்தல், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், இயற்கை வளங்களை காத்தல் ஆகிய ஏதேனும் ஒரு தலைப்புகளின் கீழ் மாணவர்களிடம் ஒளிந்திருக்கும் புதுமையான யோசனைகளை, வீடியோ, ஆடியோ வடிவில், செயல்திட்டமாக உருவாக்கி, பள்ளி வாயிலாக இணையதளத்தில் (www.inspireawards-dst.gov.in) பதிவேற்ற வேண்டும். இம்மாதம் இறுதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், இணையதளத்தில் பதிவேற்றப்படும் செயல்திட்டம் தேர்வாகும் பட்சத்தில் உரிய மாணவரின் வங்கி கணக்கு எண்ணிற்கு, 10 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு செலுத்துகிறது.இத்தொகையை கொண்டு படைப்புகளை உருவாக்கி, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் இத்திட்டத்திற்கு ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர்.இம்மாதம் இறுதிவரை அவகாசம் இருப்பதால், இதுபோன்ற கல்விசாரா திட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க வேண்டும் என்றனர்.