உள்ளூர் செய்திகள்

அமெரிக்க குழுவினருடன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்தாய்வு செய்த போது எடுத்த படம்.

பின்னலாடைகளுக்கு உலகளாவிய அங்கீகார உற்பத்தி சான்று - அமெரிக்க குழுவினர் ஏற்றுமதியாளர்களுடன் சந்திப்பு

Published On 2023-05-27 10:56 GMT   |   Update On 2023-05-27 10:56 GMT
  • உலகளாவிய அங்கீகாரம் பெற்ற உற்பத்தி (டபிள்யூ.ஆர்.ஏ.பி.) சான்று வழங்கும் குழுவினர் திருப்பூர் வந்தனர்.
  • சான்றிதழ் பெற்றால் உலக அளவில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்ய அங்கீகாரம் கிடைக்கும்.

திருப்பூர் :

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் வரத்தொடங்கியுள்ளது. பனியன் உற்பத்தி வேகமெடுத்து வரும் நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட உலகளாவிய அங்கீகாரம் பெற்ற உற்பத்தி (டபிள்யூ.ஆர்.ஏ.பி.) சான்று வழங்கும் குழுவினர் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்துக்கு வந்தனர். இந்த குழுவின் தலைவர் அவிடேஸ் செபரியன், துணைத்தலைவர் மார்க் ஜேகர் உள்ளிட்டவர்கள் வந்தனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், துணை தலைவர்கள் ராஜ்குமார், இளங்கோவன், இணைசெயலாளர் குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் உலக அளவிலான 12 விதிமுறைகளை கடைபிடித்து ஆடைகள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்து அந்த நிறுவனங்களுக்கு 'உலகளாவிய அங்கீகாரம் பெற்ற உற்பத்தி' என சான்று வழங்குவார்கள். இந்த சான்றிதழ் பெற்றால் உலக அளவில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்ய அங்கீகாரம் கிடைக்கும்.

ஏற்கனவே திருப்பூரில் சாயக்கழிவுநீர் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, 90 சதவீத நீர் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல் பசுமை திருப்பூராக மாற்றும் வகையில் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு மரங்களாக வளர்ந்துள்ளன. இதுதவிர காற்றாலை, சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரித்து பின்னலாடை நிறுவனங்களுக்கு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த விவரங்களை அமெரிக்க குழுவினர் கேட்டறிந்தனர்.

மேலும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், தொழிற்சாலை நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்தும் கலந்து ஆலோசனை நடத்தினர். உலகளாவிய அங்கீகாரம் பெற்ற உற்பத்தி சான்று பெறுவதற்கான சாத்தியங்கள் திருப்தியளிப்பதாக குழுவினர் தெரிவித்தனர். நிறுவனங்களுக்கு சான்றுகள் கிடைக்கும்போது இதன் மூலம் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் மேம்படும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News