உள்ளூர் செய்திகள்

அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை

Published On 2022-12-10 05:42 GMT   |   Update On 2022-12-10 05:42 GMT
  • மீட்டர் கேஜ் ரெயில் பாதை இருந்தபோது கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
  • அமிர்தா எக்ஸ்பிரஸ் உடுமலை ரெயில் நிலையத்திற்கு காலை 6.10 மணிக்கு வந்து, 6.12 மணிக்கு புறப்பட்டு பழனி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு 10 மணிக்கு சென்று சேருகிறது.

உடுமலை : 

உடுமலையில் முன்பு மீட்டர் கேஜ் ரெயில் பாதை இருந்தபோது கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் சேவை ராமேஸ்வரம் சென்று வந்த பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

இந்த ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிகள் நடந்து வந்ததால் இந்த வழித்தடத்தில் 2009-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக ரெயில் சேவை இல்லாமலிருந்தது. இந்த ரெயில்பாதை பணிகள் நிறைவடைந்த பிறகு கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அகல ரெயில் பாதையாக இயங்கி வருகிறது.

இதைத்தொடர்ந்து உடுமலை வழியாக ராமேஸ்வரத்திற்கு ரெயில் சேவை மீண்டும் இருக்கும் என்று பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த வழித்தடத்தில் ராமேஸ்வரத்திற்கு ரெயில் சேவை இல்லை. இந்த நிலையில் உடுமலை ரெயில் பாதை தற்போது மின்மயமாக்கப்பட்டுள்ளது. தினசரி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம், பாலக்காடு, பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் உடுமலை ரெயில் நிலையத்திற்கு காலை 6.10 மணிக்கு வந்து, இங்கிருந்து 6.12 மணிக்கு புறப்பட்டு பழனி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு 10 மணிக்கு சென்று சேருகிறது.

அந்த ரெயில் உடுமலை, பாலக்காடு, எர்ணாகுளம் வழியாக திருவனந்தபுரத்திற்கு செல்வதற்கு மதுரையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும். அதுவரை அந்த ரெயில் மதுரை ரெயில் நிலையத்தில் நின்றிருக்கும்.

ராமேஸ்வரம் வரை இந்த இடைப்பட்ட நேரத்தில் இந்த ரெயிலை ராமேஸ்வரம் வரை சென்று வரும் வகையில் இயக்குவதற்கு நேரம் உள்ளது. அவ்வாறு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலை ராமேஸ்வரம் வரை நீட்டித்து இயக்கினால் உடுமலை மட்டுமல்லாது பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயனடைவார்கள்.

அதனால் உடுமலை வழியாக இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News