உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்ற காட்சி. 

அவினாசி பேரூராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Published On 2023-06-21 07:19 GMT   |   Update On 2023-06-21 07:19 GMT
  • மன்ற பொருள் படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
  • வார்டில் இது நாள்வரையிலும் எம்.எல்.ஏ. நிதியிலிருந்து ஒரே பணி மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

அவினாசி:

அவினாசி பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மோகன் , செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .மன்ற பொருள் படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து வார்டு உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.

திருமுருகநாதன் (11-வது வார்டு):-

11- வது வார்டு ஈ.வெ.ரா.வீதியில் வடிகால் வசதி கேட்டு 6 மாதம் ஆகியும் பணி நடைபெற எந்த நடவடிக்கையுமில்லை. பேரூராட்சி ஊழியர் யாராவது இறந்துவிட்டால் அதற்கு இரங்கல் தீர்மானம் போட வேண்டும்.

ஸ்ரீதேவி (18- வது வார்டு):-

ஒவ்வொரு முறையும் மன்ற கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றுவதுடன் சரி, எந்த வேலையும் நடைபெறுவதில்லை. வார்டில் இது நாள்வரையிலும் எம்.எல்.ஏ. நிதியிலிருந்து ஒரே பணி மட்டுமே செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டு எனது வார்டு புறக்கணிக்கப்படுகிறது என்று சரமாரியாக குற்றம் சாட்டினார்.

இதேபோல் சித்ரா ( வார்டு 14), பத்மாவதி (9), சாந்தி (12), எஸ்.தேவி (10) கவிதா (2) ஆகியோரும் எங்கள் வார்டுபகுதியில் எந்த வேலையும் நடைபெறவில்லை. எதை சொன்னாலும் பிறகு பார்க்கலாம் பிறகு பார்க்கலாம் என்று தள்ளி போடுகிறார்கள் .இதனால் பொதுமக்களிடம் நாங்கள் பதில் சொல்ல முடியவில்லை .எனவே மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி அ.தி.மு.க.வை சேர்ந்த 6 வார்டு உறுப்பினர்களும் மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

Similar News