அவினாசி அருகே கத்தியை காட்டி மிரட்டி தம்பதியிடம் பணம் நகை பறிப்பு
- அவினாசியை ரங்கா நகர் பகுதியை சேர்ந்த கவின் ராஜ் மற்றும் அவர் மனைவியிடம் இருந்து பணம் நகை மற்றும் செல்போன் பறித்து செல்லப்பட்டது
- புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து ரங்கா நகர் பகுதியை சேர்ந்த சாந்தகுமார் மகன் கவின் ராஜ் ( வயது 32) .இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் கவின் ராஜிடம் வீடு வாடகைக்கு உள்ளதா என்று கேட்டவாறு குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். எனவே அவர் வீட்டிற்குள் சென்ற போது அவரை பின்தொடர்ந்து உள்ளே சென்ற ஒரு நபர் திடீரென தன் இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில். வைத்து உன்னிடம் உள்ள பணம் நகைகளை எடுத்து கொடு என மிரட்டியுள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்த அவரது மனைவி ஓடிவந்து அவரை ஒன்றும் செய்துவிடாதீர்கள் என்று கதறியவாறு கெஞ்சியுள்ளார் .அவரையும் மற்றொரு நபர் தான் வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து மிரட்டியதுடன் அவர்களிடமிருந்து ரூ .10 ஆயிரம் மற்றும் 2 கிராம் மதிப்புள்ள ஒரு ஜோடி கம்மல் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
உடனே கவின் ராஜ் அங்கிருந்த காரில் அவர்களை பின்தொடர்ந்து சென்றார். அப்போது பைக்கில் சென்ற நபர்கள் வஞ்சிபாளையம் அருகே பைக்குடன் கீழே விழுந்து பின்னர் அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் ஓடி மறைந்துவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.