உள்ளூர் செய்திகள்

ஏரி தண்ணீர் திருப்பத்தூர் ஊருக்குள் புகுந்தது

Published On 2022-06-18 16:14 IST   |   Update On 2022-06-18 16:14:00 IST
  • 2 ஆயிரம் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது
  • படகு மூலம் பொதுமக்கள் மீட்பு

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களில் சுமார் 15 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது.

இதனால் திருப்பத்தூர் பெரிய ஏரி, சேலம் மெயின் ரோட்டில் உள்ள அந்தனேரி ஏரி, கதிரமங்கலம் ஏரி, சின்ன கசிநாயக்கன்பட்டி ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் நிரம்பி உள்ளன. ஏரிகள் நிரம்பியதால் மழை பெய்து உபரி நீர் வெளியேறியது.

நேற்று இரவு திருப்பத்தூர் டவுன் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரியில் உள்ள தண்ணீர் வெளியேறியது. வேலன் நகர், அவ்வை நகர், கதிரமங்கலம், கசிநாயக்கன்பட்டி பகுதிகளில் இருந்து திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதிக்கு மழை வெள்ளம் புகுந்தது.

ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.இதனால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் தவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்தவுடன் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஹவுசிங் போர்டு பகுதியில் தண்ணீர் வரத்து வேகமாக அதிகரித்துக் கொண்டே வந்ததால் அனைத்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தெருக்களில் 2 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியது .இதனால் குழந்தைகள் பெரியவர்களுடன் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

தாசில்தார் சிவப்பிரகாசம், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு ஏரி கால்வாய்கள் செல்லும் பகுதிகளில் உடனடியாக தூர்வாரப்பட்டன. ஆனாலும் தண்ணீர் குறையவில்லை.

இதுகுறித்து அரக்கோணம் பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று காலை திருப்பத்தூர் விரைந்து வந்தனர்.

வீடுகளில் தவித்த முதியோர்கள் மற்றும் குழந்தைகளை படகு மூலம் பேரிடர் மீட்புப் படையினர் மீட்டு வந்தனர்.அவர்கள் அங்குள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

சு. பள்ளிப்பட்டு ஊராட்சி பகுதிகளில் கீழ் குறும்பர் தெரு பகுதிகளில் உள்ள வீடுகள் நீரில் மூழ்கியது சிவாஜி என்பவரது குடிசைவீடு நீரில் மூழ்கி வீட்டிலிருந்த அரிசி பருப்பு போன்ற பொருட்களை நீரில்அடித்து செல்லப்பட்டது.

தொடர் மழை காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.

மழை வெள்ளம் புகுந்த இடங்களில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.  

Tags:    

Similar News