தொடர் மழை காரணமாக வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு
- குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது
- நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து உள்ளது
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆலங்காயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள வனப்பகுதிகளிலும், பாலாறு நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணை முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. பாலாற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அம்பலூர், கொடையாஞ்சி, ஆவாரங்குப்பம், மேட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் அதிகரித்து உள்ளது.
நேற்று மாலை 3 மணியளவில் வாணியம்பாடி, ஆலங்காயம், நிம்மியம்பட்டு, அம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது.
நிம்மியம்பட்டு அரசு மருத்துவமனை பகுதியில் மருத்துவமனைக்குள் போக முடியாத அளவு சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது.
நகரப் பகுதிகளில் தாழ்வான பகுதியில் சாலைகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. தொடர்மழை காரணமாக இப்பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.