உள்ளூர் செய்திகள்

வீட்டு முன்பு திரண்ட பொதுமக்கள்.

மூதாட்டியை கல்லால் தாக்கி 15 பவுன் நகை, பணம் கொள்ளை

Published On 2022-09-03 10:03 GMT   |   Update On 2022-09-03 10:03 GMT
  • சேலையால் கட்டிபோட்டு நிலத்தில் தூக்கி வீசினர்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த மேல் மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அமராவதி (வயது 60). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் தேவராஜ். இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

அமராவதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் இதனை நோட்டமிட்ட முகமூடி அணிந்த மர்ம கும்பல் நேற்று நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்தனர். தனியாக உறங்கிக் கொண்டிருந்த அமராவதி கழுத்தில் அணிந்திருந்த திடீரென நகைகளை பறித்தனர். அப்போது அமராவதி கூச்சல் போடவே அவர் அணிந்திருந்த சேலையால் வாய் மற்றும் கை கால்களை கட்டி தூக்கி கொண்டு போய் அருகில் உள்ள நிலத்தில் போட்டனர்.

அங்கு வைத்து வீட்டில் வைத்திருக்கும் நகைகள் எங்கே இருக்கிறது என்று கேட்டனர். மூதாட்டி அதற்கு பதில் அளிக்காததால் மர்ம கும்பல் அருகில் உள்ள கல்லை எடுத்து அவரின் முகத்தின் மீது தாக்கினர்.

இதில் அமராவதி படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். அதன் பிறகு வீட்டிற்குள் சென்ற கும்பல் பீரோவை உடைத்து அதிலிருந்து 15 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை அவ்வழியாகச் சென்ற அப்பகுதி மக்கள் அமராவதி படுகாயம் அடைந்து இருந்ததை கண்டு நாட்டறம் பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த அமராவதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கட்டிப்போட்டு மூதாட்டி தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News