உள்ளூர் செய்திகள்

தொப்பையாறு அணைப்பகுதியில் அதிக அளவில் குப்பைகளும் ஆடைகளுமாக நிறைந்துள்ளதை படத்தில் காணலாம்.

துணி, பிளாஸ்டிக் குப்பை கழிவுகளால் மாசு அடையும் தொப்பையாறு அணை

Published On 2023-05-31 10:13 GMT   |   Update On 2023-05-31 10:13 GMT
  • அணைப்பகுதியில் அதிக அளவில் குப்பைகளும் ஆடைகளுமாக நிறைந்துள்ளது.
  • ஆடைகளோடு சேர்ந்து தண்ணீர் தேங்கும் நிலையில் நீர் மாசுபாடு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

 தொப்பூர்,

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே மலைகளுக்கு இடையே தொப்பையாறு அணை அமைந்துள்ளது. தொப்பையாறு அணைக்கு நீராதாரமாக தருமபுரி மாவட்ட பகுதிகள் மட்டுமல்லாமல் சேலம் மாவட்டம் ஏற்காடு மலையிலிருந்தும் ஆறுகள் வழியாக ஆனை மடுவு , பொம்மிடி வழியாக வேப்பாடி ஆற்றின் மூலம் தண்ணீர் தொப்பையாறு அணைக்கு வருகிறது.

தொப்பையாறு அணையில் இருந்து வலதுபுற மற்றும் இடது புற வாய்க்கால்கள் மூலம் தருமபுரி மற்றும் சேலம் மாவட்ட பகுதிகளில் தொப்பூர், கம்மம்பட்டி, மல்லிகுந்தம் உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் சுமார் 5330 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் பகுதிகளை ஒட்டியுள்ள மக்கள் மற்றும் பாசனப் பரப்பை ஒட்டியுள்ள மக்கள் அதிக அளவில் கால்நடைகளின் குடிநீர் தேவை மற்றும் விவசாய பணிகளுக்கு இந்த அணையையே நம்பி உள்ளனர்.

இவ்வாறு வருடம் முழுவதும் மலைகளில் இருந்து வரும் தண்ணீரை பாசன தேவைகள் மற்றும் குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தி ஒரு நிலையில் சமீப காலமாக இந்த அணைக்கு குளிப்பதற்காக வரும் பொதுமக்கள் மற்றும் ஈம காரியங்கள் சடங்குகள் செய்வதற்காக வரும் பொது மக்கள் தாங்கள் அணிந்து வரும் ஆடைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகள் உள்ளிட்டவற்றை அணை பகுதியிலேயே அப்படியே வீசிவிட்டு செல்கின்றனர்.

தற்போது அணைப்பகுதியில் அதிக அளவில் குப்பைகளும் ஆடைகளுமாக நிறைந்துள்ளது. இவை வரும் மாதங்களில் மழை பெய்யும் பட்சத்தில் அணை நிரம்பும் பொழுது இந்த பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் ஆடைகளோடு சேர்ந்து தண்ணீர் தேங்கும் நிலையில் நீர் மாசுபாடு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் அதற்குள் ஊராட்சி மற்றும் பொதுப்பணித்துறை நிர்வாகங்கள் இணைந்து அணைப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளையும் ஆடைகளையும் அப்புறப்படுத்தி அணையின் தூய்மையை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News