வேன் மோதி விவசாயி, பசுமாடு சாவு
- மினி டெம்போ வேன் நிற்காமல் சென்று விட்டது
- போலீசார் விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள சின்னஅய்யம்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் முனுசாமி(வயது68) விவசாயி. இவருக்கு ரோஜா என்ற மனைவியும்,2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக தனது விவசாயநிலத்திற்கு சென்றார். வேலூர்-திருவண்ணாமலை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேலூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி மினி டெம்போ வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேன் திடிரென விவசாயி மற்றும் மாடு மீது மோதியது.
இந்த விபத்தில் விவசாயி முனுசாமி சாலையி லிருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பசுமாடு சாலையிலேயே அடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் சிறிது நேரம் கழித்து உயிரிழந்தது.
விபத்து ஏற்படுத்திய மினி டெம்போ வேன் நிற்காமல் சென்று விட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்ணமங்கலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா க்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.