விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பாடை கட்டி நூதன போராட்டம்
- நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
வந்தவாசியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலித் மக்களின் அடிப்படை தேவைகளை நகராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாக புகார் தெரிவித்தனர்.
நகர இணைச் செயலர் ம.விஜய் தலைமை வகித்தார். இளஞ்சி றுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.டேனியல், நகர்மன்ற உறுப்பினர் ஷீலா மூவேந்தன், தொகுதி துணைச் செயலர் சு.வீரமுத்து, மாவட்ட அமைப்பாளர் சி.விநாயகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர துணைச் செயலர் மு.காளிதாசன் வரவேற்றார்.
மண்டல துணைச் செயலர் ம.கு.மேத்தாரமேஷ், மாநில துணை அமைப்பாளர் இரா.மூவேந்தன் ஆகியோர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, மாநில துணை அமைப்பாளர் இரா.மூவேந்தன் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தலையை மொட்டையடித்து கொண்டார். முன்னதாக வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகிலிருந்து பாடை கட்டி ஊர்வலமாக சென்றனர்.