உள்ளூர் செய்திகள்

இடி தாக்கி குடிசை வீடு தீயில் கருகி நாசம்

Published On 2023-11-07 09:16 GMT   |   Update On 2023-11-07 09:16 GMT
  • மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின
  • மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

மழைக்கு முன்னதாக பலத்த காற்று வீசியதில் புழுதி கிளம்பி, பொதுமக்கள் கண்ணில் விழுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் விடிய, விடிய இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சி, மங்களாபுரம் பகுதியில் நேற்று இரவு பெய்த மழையின் போது இடி தாக்கி வாழைமரங்கள் பாதியாக முறிந்து விழுந்தன. மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மின் சாதன பொருட்கள் என வெடித்து சிதறியது.

இதில் பல்பு, டி.வி. உள்ளிட்ட பொருட்கள் பழுதானது. ஒரு சில வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பானதால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர்.

அதேபோல் கண்ணமங்கலம் அடுத்த கானமலை ஊராட்சி, இருளம்பாறை அடுத்த முத்தாண்டி குடிசையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் கூரை வீட்டின் மீது இடி விழுந்து தீ பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

இருப்பினும் குடிசை வீடு முழுவதும் தீப்பிடித்து எறிந்து துணிகள், வீட்டு உபயோக பொருட்கள், நகை மற்றும் பணம் உள்ளிட்டவை தீயில் கருகி நாசமானது.

Tags:    

Similar News