உள்ளூர் செய்திகள்

பைக் மீது லாரி மோதி மாணவர் பலி

Published On 2023-11-11 07:46 GMT   |   Update On 2023-11-11 07:46 GMT
  • உறவினர் வீட்டிற்கு சென்றபோது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

செங்கம்:

செங்கம் அருகே உள்ள கண்ணக்கந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி(வயது 19). கோயம்புத்தூரில் டிப்ளமோ படித்து வந்தார்.

தீபாவளியை முன்னிட்டு கண்ணக்கந்தலில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். இன்று காலை அரட்டவாடி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பாலாஜி பைக்கில் சென்றார்.

கொட்டகுளம் அருகே வரும்போது எதிரே கிருஷ்ணகிரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற சரக்கு லாரியும், பாலாஜி ஓட்டி வந்த பைக்கும் எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் பாலாஜி பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விபத்துக் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News