உள்ளூர் செய்திகள்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

Published On 2023-06-30 09:45 GMT   |   Update On 2023-06-30 09:45 GMT
  • வேலூரை சேர்ந்தவர்
  • பஞ்சுமிட்டாய் தயாரிக்க சுவிட்சை ஆன் செய்தபோது விபரீதம்

ஆரணி:

வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் அருள்மாறன் (வயது 19), ஆற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் படித்து வந்தார்.

கல்லூரி மாணவர்

இவர் படித்துக் கொண்டு விடுமுறை நாட்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து கொடுப்பது மற்றும் கேட்ரிங் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், திருவண் ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பஞ்சுமிட்டாய், பாப்கான் தயாரித்து கொடுப்பதற்காக அருள்மாறன் சென்றார். அப்போது திடீரென மின்நிறுத்தம் ஏற்பட்டது.

பின்னர், சிறிது நேரம் கழித்து மின்சாரம் வந்தது. மீண்டும் பாப்கான், பஞ்சுமிட்டாய் தயாரிக்க சுவிட்சை ஆன் செய்தார். அதிலிருந்த மின்சாரம் இவர் மீது பாய்ந்தது.

இதில் அருள்மாறன் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, அருள் மாறனின் தந்தை குமார் நேற்று களம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அருள்மாறன் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுசம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News