5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு
- சிறுமியின் பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல்
- வாலிபருக்கு வலைவீச்சு
செய்யாறு:
செய்யாறு பகுதியை சேர்ந்த தொழிலாளியின் 10 வயது மகள், அதே பகுதியில் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்களது எதிர் வீட்டில் 20 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். தொழிலாளியின் வீட்டில் அடிக்கடி வாலிபர் சென்று நெருங்கி பழகி உள்ளார். இந்த நிலையில் பள்ளி மாணவியை வாலிபருடன் கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி வர அனுப்பி உள்ளனர்.
வாலிபர் பள்ளி மாணவியை அந்தப் பகுதியில் உள்ள ஏரி பகுதிக்கு அழைத்து சென்றார். அங்குள்ள முட் புதரில் வைத்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் வாலிபரிடம் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் சிறுமியின் பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
பின்னர் இது குறித்து சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் போக்சோ மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.