உள்ளூர் செய்திகள்

திருநள்ளாறு சனிஸ்வரன் கோவிலில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

Published On 2023-04-29 12:38 IST   |   Update On 2023-04-29 12:38:00 IST
  • கருப்புசாமி மதுரையில் நெல் வியாபாரம் செய்து வருகிறார்.
  • யாரோ சொன்னதை கேட்டு புகார் தராமல் வந்தது தவறு என உணர்ந்தனர்.

காரைக்கால்:

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் சன்னதி எதிரே, சாமி தரிசனம் செய்த பெண்ணிடம், 6 1/2 பவுன் தங்க நகை திருடிய மர்ம நபரை பிடித்து தங்க நகையை மீட்டுத்தருமாறு, பெண்ணின் கணவர், திருநள்ளாறில் போலீசில் புகார் அளித்துள்ளார். மதுரை தூநேரி அழகர் கோவில் மெயின் சாலையைச்சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் மதுரையில் நெல் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன், கருப்புசாமியை காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரரை தரிசனம் செய்துவந்தால், நேரம் நல்லா இருக்கும் என ஜோதிடர் கூறியதை அடுத்து, கருப்புசாமி, தனது மனைவி உமாதேவியுடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சனீஸ்வரரை, அவரது சன்னதி எதிரே நின்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பும்போது, உமாதேவியின் கழுத்தில் இருந்த ஆறரை பவுன் தங்க நகையை காணவில்லை. கூட்டத்தை விலக்கி பல இடங்களில் தேடியும் நகை கிடைக்கவில்லை. தொடர்ந்து, உமாதேவி திருநள்ளாறு போலீசில் புகார் கொடுக்க கணவரிடம் கூறியுள்ளார். அப்போது அங்கு இருந்த சிலர், உயிருக்கு வந்த ஆபத்து தங்க செயினுடன் போய்விட்டது. சனியும் விலகிவிட்டது. அதனால், புகார் தராமல் வீட்டுக்கு போங்க என கூறியதாக கூறப்படுகிறது. அதனை நம்பி தம்பதியினர் புகார் தராமல் ஊர் திரும்பிவிட்டனர். ஊர் சென்றதும், யாரோ சொன்னதை கேட்டு புகார் தராமல் வந்தது தவறு. புகார் தந்தால்தான் நகை கிடைக்கும் என உமாதேவி கணவரிடம் அடிக்கடி கூறிவந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காரைக்கால் திருநள்ளாறு வந்த கருப்புசாமி, கடந்த டிசம்பர் மாதம் சனீஸ்வரர் சன்னதி முன்பு நடந்ததை கூறி, கோவில் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை வைத்து, மர்ம நபரை பிடித்து, தங்க நகையை மீட்டுதருமாறு புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News