உள்ளூர் செய்திகள்

மின்கம்பங்கள் இருந்தும் மின்இணைப்பு இல்லை: இருளர் இன மக்கள் கலெக்டரிடம் மனு

Published On 2022-11-15 15:35 IST   |   Update On 2022-11-15 15:35:00 IST
  • 25-க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
  • மின்வாரியத்திற்கு டெபாசிட் செலுத்தியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

கிருஷ்ணகிரி,

பர்கூர் அடுத்த மல்லப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மரிமானப்பள்ளி கிராமம் இருளர் காலனியை சேர்ந்த, 25-க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

பர்கூர் தாலுகா, மல்லப்பாடி ஊராட்சி மரிமானப்பள்ளி கிராம இருளர் காலனியில், 33 குடும்பங்களை சேர்ந்த, 90 பேர், 60 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலைவசதி, ஜாதி சான்றிதழ், சுகாதார நிலையம் போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லை. எங்கள் வீடுகளும் சிதிலமடைந்து உள்ளன. குடிநீருக்காக, 3 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் அவலம் உள்ளது.

இந்நிலையில் மின் இணைப்பு பெறுவதற்காக மின்வாரியத்திற்கு டெபாசிட் செலுத்தியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மின் கம்பங்கள் மற்றும் தளவாடங்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் மின் இணைப்பு கொடுக்கவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குழந்தைகள் இருளிலும், மழையிலும், விஷக்கடி பயத்தாலும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்காலிக பட்டா வழங்கப்படும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறைப்படி இடத்தை அளவீடு செய்து நிரந்தர பட்டா வழங்க வில்லை. குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் இல்லாததால் கல்வி தொடர முடியாமல் குழந்தை தொழிலாளர்களாக உருவாகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News