உள்ளூர் செய்திகள்

தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்

Published On 2023-03-10 09:55 GMT   |   Update On 2023-03-10 09:55 GMT
  • நேற்று இரவு தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
  • பக்தர்கள் பூஜைப்பொருட்களை வழங்கி சாமி வழிபாடு நடத்தினர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 7-ந்தேதி விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு தொடங்கி விடிய, விடிய தேர்பேட்டையில் பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பிகை அம்மன், விநாயகர், முருகன் உள்ளிட்ட சுமார் 20 சாமிகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வைத்து, தேர்பேட்டை வீதிகளில் மேள, தாள வாத்தியத்துடன் பல்லக்கு உற்சவம் நடைபெற்றது.

விழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக, நேற்று இரவு தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமியை வைத்து, மேள, வாத்தியத்துடன் குளத்தை சுற்றி 3 முறை தெப்பம் சென்றது. அப்போது பக்தர்கள், ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா என்று பக்தி கோஷம் எழுப்பினர். மேலும் பக்தர்கள் பூஜைப்பொருட்களை வழங்கி சாமி வழிபாடு நடத்தினர்.

இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு . தெப்ப உற்சவத்தை தரிசித்தனர். விழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News