கோப்பு படம்.
மழை நின்றதால் 47 அடியாக சரிந்த வைகை அணை நீர்மட்டம்
- அரசரடி, வருசநாடு, வெள்ளிமலை, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது.
- மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும்.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு போதிய அளவு நீர்மட்டம் இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.
தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசரடி, வருசநாடு, வெள்ளிமலை, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து இல்லை. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 47.63 அடியாக சரிந்துள்ளது. இதனால் முதல்போக சாகுபடி நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.
மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும். முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 119.50 அடியாக உள்ளது. 83 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 69.99 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.