அய்யலூர் சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை கடும் சரிவு
- தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
- அய்யலூர் சந்தையில் 15 கிேலா கொண்ட பெட்டி ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனையானது.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே அய்யலூரில் தக்காளிக்கென தனி சந்தை உள்ளது. மாலை நேரத்தில் நடைபெறும் இந்த தக்காளி சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளான கொம்பேறிபட்டி, கல்பட்டிசத்திரம், குருந்தம்பட்டி, கடவூர், நடுப்பட்டி, மோர்பட்டி, தீர்த்தாகிழவனூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
வெளி மாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வந்து கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநிலங்களில் கனமழை பெய்ததால் தக்காளி வரத்து குறைந்தது. இதனால் 1 கிலோ ரூ.200 வரை விற்பனையானது. அப்போது பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. அய்யலூர் சந்தையில் 15 கிேலா கொண்ட பெட்டி ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனையானது. 1 கிலோ ரூ.5 க்கு மட்டுமே விற்பனையானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
மேலும் வியாபாரிகளும் தக்காளி வாங்க ஆர்வம் காட்டாததால் பெருமளவு தேக்கமடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் தக்காளியை சாலையோரம் கொட்டி சென்றனர்.