உள்ளூர் செய்திகள்

சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவையை நிறுத்தும் திட்டம் கைவிடப்படுகிறது

Published On 2023-06-08 10:39 GMT   |   Update On 2023-06-08 10:39 GMT
  • பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் 4-வது ரெயில்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • சென்னை கோட்ட உயர் அதிகாரிகளின் கருத்துக்களை பெற்று பறக்கும் ரெயில் சேவையை பாதிக்காத வகையில் 4-வது ரெயில் பாதை அமைக்கப்படும்.

சென்னை:

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூருக்கு 4-வது ரெயில்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

4-வது ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையொட்டி சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவை 7 மாதங்கள் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பயணிகளின் எதிர்ப்பை தொடர்ந்து சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவையை நிறுத்தும் திட்டம் கைவிடப்படுகிறது. பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் 4-வது ரெயில்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூருக்கு 4-வது ரெயில் பாதை அமைக்கப்படுவதையொட்டி சென்னை கடற்கரை- சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவையை 7 மாதங்கள் நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

எனவே இதுபற்றி முடிவு எடுக்க அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவையை நிறுத்தி வைக்கும் திட்டத்தை கைவிட தெற்கு ரெயில்வே முடிவு செய்து உள்ளது. இதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதற்கான முறையான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும்.

சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் மற்றும் போக்குவரத்து செயலாளருடன் கலந்தாலோசித்து புதிய திட்டத்தை இறுதி செய்து வருகிறோம். இந்த வார இறுதிக்குள் புதிய திட்டம் தயாராகிவிடும்.

சென்னை கோட்ட உயர் அதிகாரிகளின் கருத்துக்களை பெற்று பறக்கும் ரெயில் சேவையை பாதிக்காத வகையில் 4-வது ரெயில் பாதை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News