உள்ளூர் செய்திகள்

வாலிபரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

Published On 2022-07-28 10:33 GMT   |   Update On 2022-07-28 10:33 GMT
  • பஸ் மோதி உயிரிழந்தார்
  • மோட்டார் சைக்கிளில் சென்ற போது அரசு பஸ் மோதியது.

கோவை:

கோவை தடாகம் சாலையில் வசித்து வருபவர் கண்ணன்(வயது65). இவரது மனைவி கோமதி(65). இவர்களது மகன் கார்த்திகேயன்(41).

இவர் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த 2009 மார்ச் 10-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிர் திசையில் வந்த அரசு பஸ் கார்த்திகேயன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து நடந்த போது தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்த கார்த்திகேயன் மாதம் ரூ.15 ஆயிரம் வருவாய் ஈட்டி வந்தார்.

மகன் உயிரிழந்து விட்டதால் உரிய இழப்பீடு வழங்க கோரி கார்த்திகேயனின் பெற்றோர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கார்த்திகேயனின் பெற்றோருக்கு மொத்தம் ரூ.12.63 லட்சத்தை வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து கணக்கிட்டு 7.50 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2021 செப்டம்பர் 21-ந் தேதி உத்தரவிட்டது.

இருப்பினும் உரிய காலத்தில் இழப்பீடு கிடைக்காததால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்று மனுவை கடந்த ஜனவரி மாதம் கார்த்திகேயனின் பெற்றோர் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜப்தி உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து காந்திபுரம்-சிவானந்தா காலனி வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ் நேற்று ஜப்தி செய்யப்பட்டது.

Tags:    

Similar News