விவசாயியை விடாமல் துரத்தி தாக்கி கொன்ற யானை
- வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு யானை அவரை விரட்டியது.
- மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள தேவர்பெட்டா கிராமத்தை சேர்ந்தவர் லகுமய்யா (வயது 53). விவசாயி.
இவர் நேற்று தளி அருகே பங்களாசரகம் வனப்பகுதியில் ஆடுகள் மேய்த்து கொண்டு இருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு யானை அவரை விரட்டியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த லகுமய்யா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் யானை அவரை விடாமல் துரத்தி சென்று தாக்கி தூக்கி வீசியது. இதில் லகுமய்யா படுகாயம் அடைந்தார்.
பின்னர் யானை அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இந்த நிலையில் லகுமய்யாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர்.
அவர்கள் படுகாயம் அடைந்து கிடந்த லகுமய்யாவை மீட்டு சிகிச்சைக்காக தளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தளி வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்த லகுமய்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.