உள்ளூர் செய்திகள்

கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தாக்கிய டிரைவர்

Published On 2022-08-17 09:49 GMT   |   Update On 2022-08-17 09:49 GMT
  • வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர்
  • கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

கோவை மாவட்டம் கோமங்கலம் அருகே உள்ள புது காலனியை சேர்ந்த 38 வயது இளம் பெண்.

இவர் கோமங்கலம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கஞ்சம்பட்டியை சேர்ந்த திருமணமான 35 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக எனக்கு தெரிய வந்தது. இது குறித்து நான் எனது கணவரிடம் கேட்ட போது எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 13-ந் தேதி எனது பாட்டி இறந்து விட்டார்.

அவரது இறுதி சடங்கிற்கு நான் சென்றேன். அங்கு எனது கணவருடன் கள்ளத்தொடர்பில் உள்ள இளம்பெண்ணின் மாமியார் வந்து இருந்தார். அவரிடம் நான் எனது கணவரின் கள்ளக்காதல் குறித்து தெரிவித்தேன். இது குறித்து அவர் இளம்பெண்ணிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

சம்பவத்தன்று நான் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது எனது கணவரின் கள்ளக்காதலி அவரது கணவருடன் எங்கள் வீட்டிற்கு வந்தனர். என்னிடம் ஏன் தேவையில்லாத வதந்தி எல்லாம் பரப்புகிறாய் என கேட்டு தகாத வார்த்தைகளால் பேசினர். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்து அவர்கள் 2 பேரும் சேர்ந்து என்னை தாக்கினர். எனது கணவரும் அவர்களுடன் சேர்ந்து தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த என்னை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். எனவே அவர்கள் 3 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் இளம்பெண்ணின் கணவர், அவரது கள்ளக்காதலி, அவரது கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News