உள்ளூர் செய்திகள்

சூலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

Published On 2023-01-23 09:20 GMT   |   Update On 2023-01-23 09:20 GMT
  • கடந்த 17-ந் தேதி ரமேஷ் தனது வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றார்.
  • நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

கோவை

கோவை சூலூர் அருகே உள்ள முதலிபாளையம் ஸ்ரீ சக்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). இவர் அந்த பகுதியில் லேத் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த 17-ந் தேதி ரமேஷ் தனது வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம் உள்பட 1¾ பவுன் தங்க நகைகள், ரூ.17 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

வீட்டிற்கு திரும்பி ரமேஷ் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லேத் ஒர்க்ஷாப் உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News