தீப்பிடித்து எரிந்த காரை படத்தில் காணலாம்.
நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது
- முரளி (வயது 50). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
- சேலத்தில் இருந்து பெங்களூருக்கு சென்ற கார் எதிர்பாராதவிதமாக முரளி கார் மீது மோதியது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த எலத்தூர் அண்ணாநகர் பகுதி சேர்ந்தவர் முரளி (வயது 50). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு தேவையான வாழை இலை வாங்க முரளி தனது மகனுடன் இன்று காலையில் காரில் தீவட்டிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை முரளி ஓட்டினார்.
எலத்தூர் பஸ் நிறுத்தத்தில் உள்ள நெடுஞ்சாலையை கார் கடக்கும்போது சேலத்தில் இருந்து பெங்களூருக்கு சென்ற கார் எதிர்பாராதவிதமாக முரளி கார் மீது மோதியது. மேலும் அந்த கார் நிற்காமல், சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள இரும்பு தூண், மற்றும் இரும்பு தகட்டில் பயங்கரமாக மோதி நின்றது.
அப்போது கார் முழுவதும் உடனடியாக தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. இந்த காரில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 4 பேர் இருந்தனர்.
இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து காரை திறந்து காருக்குள் இருந்த 4 பேரையும் காப்பாற்றி சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் லேசான காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
முரளி ஓட்டி வந்த காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.இந்த விபத்தில் முரளி, அவரது மகன் ஆகியோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கர்நாடக காரில் பிடித்த தீைய அணைத்தனர். இந்த சம்பவத்தால் சாலையின் இருபுறமும் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிகிச்சை
காயம் அடைந்த கார்நாடக மாநிலத்தை சேர்ந்த 4 பேருக்கும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.