அக்னி பாத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் -ஓசூரில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் பேட்டி
- ஓசூரில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி பேட்டியளித்தார்.
- அக்னிபாத் திட்டத்துக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய நுபுர் சர்மா, ஜிண்டால் ஆகியோரை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், உ.பி-யில் இவர்களுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிய மக்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியதாக பா.ஜ.க. அரசை கண்டித்தும் கிருஷ்ணகிரி மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முகமது ஆரிப் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் சையத் நவாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் அமீன் சிக்கந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில்,கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி, கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில், கட்சி நிர்வாகிகள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் இக்ரம் அகமது மற்றும் சையத் நிசார் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின்போது, பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில், மாநகர செயலாளர் முகமது உமர் நன்றி கூறினார்.
பின்னர், தமிமுன் அன்சாரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -மத வெறியை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அக்னி பாத் என்பது இந்திய ராணுவத்தின் கவுரவத்தை சீர்குலைக்கும் செயலாகும். இதனை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.