உள்ளூர் செய்திகள்

நீரில் மூழ்கி பலியான வாலிபரை போலீசார் மீட்டபோது எடுத்த படம்.

தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2022-09-26 07:35 GMT   |   Update On 2022-09-26 07:35 GMT
  • 35 வயது வாலிபர் ஒருவர் ஆற்றில் தண்ணீருக்குள் மூழ்கி கொண்டிருந்ததை சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
  • தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய வாலிபரை தேடினார்கள்.

கடலூர்:

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம் தென்பெண்ணை ஆற்றில் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று காலை 35 வயது வாலிபர் ஒருவர் ஆற்றில் தண்ணீருக்குள் மூழ்கி கொண்டிருந்ததை சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சோதனை சாவடி போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் நெல்லிக்குப்பம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சிவா தலைமையில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய வாலிபரை தேடினார்கள். 

அப்போது ஆழமான பகுதியில் வாலிபர் மூழ்கி இறந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் இறந்த வாலிபர் யார்? என்ன காரணத்திற்காக ஆற்றில் இறங்கினார்? என்பது குறித்துவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News