உள்ளூர் செய்திகள்

மகளிர் குழு லோன் வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி

Published On 2024-02-17 05:26 GMT   |   Update On 2024-02-17 05:26 GMT
  • பல பேரிடம் கோடி கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்தது.
  • போலீசார் 6 வருடங்களாக தலைமறைவாக இருந்த செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் மாயழகன். இவரது மனைவி நந்தினி தேவி. இவர் திண்டுக்கல் மதுரை-சாலை அண்ணாமலை மில்ஸ் ரோட்டில் எஸ்.ஆர். நகரில் உள்ள எர்த் டிரஸ்ட் என்ற நிறுவனத்தில் மகளிர் குழு லோனுக்காக கடந்த 8 வருடத்திற்கு முன்பு அணுகியுள்ளார்.

அப்போது மகளிர் குழு லோன் மற்றும் வீடு கட்ட லோன் தருகிறோம். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை முன்பணம் கட்ட வேண்டும் என டிரஸ்ட் நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் சுமார் ரூ.40 லட்சம் வரை பொதுமக்களிடம் வசூல் செய்து அந்த நிறுவனத்தில் கட்டியுள்ளார். ஆனால் அவர்கள் 2 வருடமாக லோன் வாங்கி தராமல் இழுத்தடித்துள்ளனர். அவர்களுடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் அந்த நிறுவனத்திற்கு சென்ற போது நிறுவனம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மகளிர் குழு லோன் வாங்கி தருவதாக மோசடி செய்த கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு திண்டுக்கல்,தேனி ஆகிய பகுதிகளில் எர்த் டிரஸ்ட் என்ற நிறுவனம் நடத்தியதும், இதே போல் பல பேரிடம் கோடி கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஏ.டி.ஜி.பி.பாலநாகதேவி, ஐ.ஜி.சத்திய பிரியா, போலீஸ் சூப்பிரண்டு பி.சி.கல்யாண் ஆகியோரின் உத்தரவு படியும், டி.எஸ்.பி. குப்புசாமி மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் செல்போன் டவரை வைத்து அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது சென்னை குரோம்பேட்டை அருகே செல்வராஜ் பதுங்கி உள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 6 வருடங்களாக தலைமறைவாக இருந்த செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி கூறுகையில்,

திண்டுக்கல், தேனி ஆகிய பகுதிகளில் எர்த் ட்ரஸ்ட் என்ற நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் செய்யலாம் என்றார்.

Tags:    

Similar News