உள்ளூர் செய்திகள்

அமெரிக்காவில் இருந்து துறையூருக்கு திருமணம் முடிக்கும் ஆசையுடன் வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-11-26 09:27 GMT   |   Update On 2022-11-26 09:27 GMT
  • மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய மகனை பிணக்கோலத்தில் பார்த்த பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைத்தது.
  • வாலிபர் தற்கொலை குறித்து ஜம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பொன்னுசங்கம்பட்டி கிராமம் முத்துராஜா தெரு பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் சசிகுமார் (வயது 30). இவர் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு அமெரிக்காவில் பணியாற்றி வந்தார்.

திருமண வயதை எட்டிய சசிகுமாருக்கு பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் அவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

பின்னர் பெற்றோர் அவருடன் சென்று பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தனர். ஆனால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து முடிவாகாமல் இழுபறியே நீடித்து வந்தது.

திருமணம் முடித்து இல்லற வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்ற கனவுகளுடன் வந்த சசிகுமாருக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் சசிகுமார் மிகுந்த மன வேதனைக்கு ஆளானார்.

இதற்கிடையே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார்.

மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய மகனை பிணக்கோலத்தில் பார்த்த பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைத்தது. இந்த சம்பவம் குறித்து ஜம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News