உள்ளூர் செய்திகள்

அரக்கோணம் அருகே வாலிபர் கழுத்து அறுத்து கொலை: போலீசார் விசாரணை

Published On 2023-09-04 06:10 GMT   |   Update On 2023-09-04 06:10 GMT
  • விக்னேஷ் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகளில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.
  • விக்னேசை அழைத்து கொன்றது யார்? முன்விரோதம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 27). இவரது மனைவி யாமினி (22). இவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

தம்பதியினருக்கு குழந்தை இல்லை. விக்னேஷ் தனது மனைவி யாமினியுடன் மாமனார் ஒலிச்சந்திரன் வீட்டில், வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு விக்னேஷ், யாமினி அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனி குடித்தனம் சென்றனர்.

விக்னேஷ் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகளில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு விக்கி மற்றும் யாமினி ஆகியோர் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது நண்பர் அழைப்பதாக செல்போனை சார்ஜர் போட்டுவிட்டு விக்னேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

பொழுது விடிந்த பின்பும் விக்னேஷ் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன யாமினி மற்றும் அவரது உறவினர்கள் அந்த பகுதியில் தேடினர்.

அப்போது சித்தேரி ரெயில்வே கேட் அருகே மாந்தோப்பில் கிணற்றின் அருகே விக்னேஷ் கழுத்து அறுத்து ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை கழுத்து அறுத்து கொலை செய்துள்ளனர்.

அவரது உடலை பார்த்து யாமினி கதறி அழுதார்.

இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவில் விக்னேசை அழைத்து கொன்றது யார்? முன்விரோதம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News