சாம்பவர்வடகரை அருகே காட்டுப்பன்றிகள் கடித்து வாலிபர் மரணம்
- காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
- காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாம்பவர்வடகரை:
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அருகே உள்ள ஆய்க்குடி சேனை விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் மாடசாமி. இவரது மகன் மணிச்சாமி(வயது 30). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.
இவர் இன்று அதிகாலை ஆய்க்குடி டவுன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காட்டுப்பன்றி கூட்டங்கள் அவரை விரட்டி சென்று கடித்து குதறி உள்ளது.
இதில் படுகாயம் அடைந்த மணிச்சாமியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக ஆய்க்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுப்பன்றி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும், காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தரப்பில் தென்காசி மாவட்ட நிர்வாகத்திடம் தொடர் கோரிக்கைகள் வைத்து வரும் நிலையில், காட்டுப்பன்றி கடித்து வாலிபர் உயிரிழந்துள்ளார்.