நகைக்கடையில் கத்திமுனையில் மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது
- நகைக்கடைக்குள் புகுந்து வாலிபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விசாரணையில் நகைக்கடைக்குள் புகுந்து கைவரிசை காட்ட முயன்றது சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஏ.சி மெக்கானிக் சிலம்பரசன் என்பது தெரியவந்தது.
போரூர்:
ராமாபுரம், ராயலா நகர் 1-வது மெயின் ரோட்டில் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு கேசியராக பரத்குமார் உள்ளார். நேற்று மாலை வழக்கம்போல் நகைக்கடையில் வியாபாரம் நடந்து கொண்டு இருந்தது. வாடிக்கையாளர்கள் சிலர் கடையில் இருந்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர் தனது முகத்தை துணியால் மூடிக்கொண்டு திடீரென நகைக்கடைக்குள் புகுந்தார். பின்னர் அவர் கேசியர் பரத்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி "கல்லாப்பெட்டியில் உள்ள பணத்தை கொடு" என்று மிரட்டல் விடுத்தார். இதனை கண்டு நகை கடையில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுதாரித்துக் கொண்ட பரத்குமார் அருகில் கிடந்த கட்டையால் கொள்ளையனை தாக்கினார். உடனே மற்ற ஊழியர்களும் சேர்ந்து மர்மவாலிபரை மடக்கி பிடித்தனர். இதற்குள் சத்தம் கேட்டு பொதுமக்களும் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
அவர்கள் கொள்ளையனுக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவனை ராமாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் நகைக்கடைக்குள் புகுந்து கைவரிசை காட்ட முயன்றது சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஏ.சி மெக்கானிக் சிலம்பரசன் (வயது32) என்பது தெரியவந்தது.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பூரில் உள்ள நகைக்கடையின் ஷட்டரில் துளையிட்டு 9 கிலோ நகைகள் கொள்ளை போனது. இந்த கொள்ளையில் இன்னும் குற்றவாளிகள் சிக்கவில்லை.
இந்த நிலையில் நகைக்கடைக்குள் புகுந்து வாலிபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.