உள்ளூர் செய்திகள்

ஆடுகளை விற்பனை செய்வதில் தகராறு- தம்பியை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற அண்ணன்

Published On 2023-03-31 07:42 GMT   |   Update On 2023-03-31 07:42 GMT
  • சகோதரர்கள் இருவரும் ஒன்றாக ஆடு மேய்க்க சென்றுவிட்டு, சந்தையில் ஆடுகளை விற்று விட்டு வந்தனர்.
  • அண்ணன், தம்பி இருவருக்கும் ஆடு விற்பதில் திடீரென்று சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது.

மண்ணச்சநல்லூர்:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த நெம்பர் 1 டோல்கேட் அருகிலுள்ள தாளக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் விஜயன்-மாரியாயி தம்பதியினர். இவர்களுக்கு முத்தையா (வயது 30), கோபி (27) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர்.

அவர்கள் இருவரும் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அவ்வப்போது கோபி மட்டும் கூலி வேலைக்கும் செல்வார். இதில் முத்தையா சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இவர் சில நேரங்களில் தனது தாய் மட்டும் அல்லாது அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளையும் அடித்து வந்ததாக கூறப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட முத்தையா அவரது தாய் மரியாயை அடித்துள்ளார். இதனால் அண்ணன் தன்னையும் அடிக்க கூடும் என கருதிய கோபி வீட்டில் படுக்கையறையில் தூங்காமல் மொட்டை மாடியில் சென்று படுத்து வந்தார். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றாக ஆடு மேய்க்க சென்றுவிட்டு, சந்தையில் ஆடுகளை விற்று விட்டு வந்தனர். இந்தநிலையில் அண்ணன், தம்பி இருவருக்கும் ஆடு விற்பதில் நேற்று திடீரென்று சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் இரவு வழக்கம் போல் வீடு திரும்பிய அவர்கள் சாப்பிட்டு விட்டு, வீட்டின் மாடியில் தூங்க சென்றனர். அப்போதும் அவர்களுக்கிடையே தகராறு உருவானது. பின்னர் அவர்கள் தூங்க சென்றனர்.

இதில் ஆத்திரம் அடைந்த முத்தையா தம்பி என்றும் பாராமல், தூக்கத்தில் இருந்த கோபியை இரும்புக் கம்பியால் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த கோபி மண்டை உடைந்து மூளை சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம், சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தம்பியை கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட முத்தையாவையும் கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரிடம் நான் கொலை செய்யவில்லை என கூறினார். அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை அண்ணன் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News