உள்ளூர் செய்திகள்

அந்தியூர் அருகே திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா போராட்டம்

Published On 2024-02-03 08:33 GMT   |   Update On 2024-02-03 08:33 GMT
  • பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி புகார் கொடுத்தார்.
  • திருமணம் செய்து கொள்ள மறுத்த பிரபாகரன் வீட்டு முன்பு சிவரஞ்சனி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள ஓடைமேடு பகுதியை சேர்ந்த சிவக்குமார், மாலதி தம்பதியினரின் மகள் சிவரஞ்சனி (24). பி.இ. பட்டதாரி.

அந்தியூர் அடுத்த சமத்துவபுரம் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் முருகன், சரசு தம்பதியினரின் மகன் பிரபாகரன் (30). டெல்லியில் தனியார் கம்பெனியில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், சிவரஞ்சனி- பிரபாகரன் ஆகிய இருவரும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வருவதாக தெரிகிறது. இவர்கள் காதல் விவகாரம் வீட்டில் தெரிய வந்ததால், பிரபாகரனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பிரபாகரன் சிவரஞ்சனியை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி புகார் கொடுத்தார். 2 பேரையும் அழைத்து பேசிய போலீசார், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 பேருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போதும் பிரபாகரன், சிவரஞ்சனியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

தொடர்ந்து மீண்டும் இன்று மதியம் 12 மணிக்கு மேல் கவுன்சிலிங் வழங்க அதிகாரிகள் முடிவு செய்து அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள மறுத்த பிரபாகரன் வீட்டு முன்பு சிவரஞ்சனி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News